Pages

Saturday, October 4, 2008

மதாயின் ஸாலிஹ் – குர்ஆன் கூறும் வராலற்றுக்கு ஒரு நேரடி சாட்சி

மதாயின் ஸாலிஹ்
குர்ஆன் கூறும் வராலற்றுக்கு ஒரு நேரடி சாட்சி
(முகமது கால மக்கள் முகமதுவை இப்படிக் கண்டனர்! பகுதி –5 )
நபிகள் நாயகத்தின் காலத்து மக்கள் அவர்களைப் பொய்யர், குறிகாரர், சூனியக்காரர் என்றெல்லாம் தூற்றியதாகக் குர்ஆன் கூறுகிறது, எனவே நபிகள் நாயகம் அப்படிப்பட்டவர் தான் என்பதற்கு குர்ஆனின் இந்த சாட்சி ஆதாரமாகும் என்று ஒரு விசித்திரப் பதிவை கிறிஸ்தர் ஒருவர் தனது தளத்தில் பதித்திருந்தார். நபிகள் நாயகம் பொய்ப்பிக்கப் பட்டதைப் போன்று முந்தைய தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் என்ற செய்தியையும் குர்ஆன் கூறுவதோடு எந்த மக்கள் பொய்ப்பித்தார்களோ அந்த மக்களே கூட்டம் கூட்டமாக வந்து அவர்களை உண்மைப் படுத்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். மட்டுமல்ல எந்த நாட்டில் அவர்கள் பொய்ப்பிக்கப் பட்டார்களோ அந்த நாடே அவர்கள் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இன்று உலகெங்கும் கோடானு கோடி மக்களால் பின்பற்றப் படும் அளவுக்கு இக்கொள்கை மேலோங்கியுள்ளதே! ஒரு பொய்யர் அல்லது குறிகாரர் அல்லது சூனியக் காரரின் கொள்கை இந்த அளவுக்கு ஏன் மேலோங்க வேண்டும்? "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன். (58:21)
என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அவர்கள் இறைதூதர் தான் என்பதற்கான உறுதியான சான்று இது. எனவே கிறித்தவரின் இவ்வாதம் அடிப்படையற்றது என்று முந்தைய பதிவுகளில் நாம் விளக்கியிருந்தோம். அதற்கு இதுவரையிலும் அந்தக் கிறித்தவர் பதிலளிக்காமை அவரது புத்தியீனத்திலிருந்து வெளிப்பட்டதே இவ்வாதம் என்பதைப் பறைசாற்றுகிறது.
நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தில் களங்கம் கற்பிகக்க குர்ஆனிலிருந்து ஆதாரம் தேடியவர்கள் நமது தர்க்க வாதங்களுக்கு பதிலளிக்க இயலாமல் விழிபிதுங்கிய நிலையில் நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் குர்ஆனின் சாட்சிகளை நாம் பார்த்து வருகிறோம்.
இதுகுறித்த முந்தைய பதிவுகள்

பகுதி - 1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4
பைபிளில் இடம் பெறாத மிக முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் திருக்குஆனில் கூறப்பட்டுள்ளமையும் அவற்றை நிரூபித்துக் கொண்டிருக்கும் புவியியல் சான்றுகளும் குர்ஆன் நபிகள் நாயகத்துக்கு இறைவனால் அருளப்பட்டது என்பதற்கான அத்தாட்சிகள் என்றும் தனது நாற்பது வயது வரை இது குறித்து எதுவும் அறியாத முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்பதற்கான ஆதாரங்கள் எனவும் நாம் கூறியிருந்தோம். திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்ட பைபிளில் கூறப்படாத ஆது சமூகம் அவர்களுக்கு மத்தியில் அனுப்பப் பட்ட நபி ஹூது அலைஹிஸ்ஸலாம் பற்றிய செய்திகளை ஆதாரங்களுடன் முந்தைய பதிவில் பார்த்தோம்.
குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுக் கூறிய மிக முக்கிய வரலாற்றுச் சம்பவமான, பைபிளில் இடம் பெறாத, ஃதமூது என்ற கோத்திரத்தார் அழிக்கப்பட்டது, அவர்களின் வரலாறு, அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறை தூதர் ஆகியன பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஃதமூது கோத்திரம் பற்றிக் குறிப்பிடும் குர்ஆன் வசனங்கள்
இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்." (11:61)
அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள். (11:62)
ஹூது நபியின் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்து வந்தவர்கள் ஃதமூது என்ற கோத்திரத்தினர். மதீனாவுக்கு வடக்கே சுமார் 180 மைல் தூரத்தில் அமைந்துள்ள, மலைகளாலும் பாலை நிலங்களாலும் நிறைந்துள்ள ஹிஜ்ர் என்ற பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். மதாயின் ஸாலிஹ் என்றும் இவ்விடம் அழைக்கப் படுகிறது. மலைப் பாறைகளைக் குடைந்து வீடுகளை நிர்மித்து வாழ்ந்து வந்த இச்சமூகம் வலிமை மிக்கதொரு சமுதாயமாக இருந்தது. பல தெய்வ வழிபாட்டிலும் வன்முறையிலும் ஊறிப் போயிருந்த இவர்களுக்கு மத்தியில் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைதூதராக வந்தார்கள். பெருமை கொண்டு இறைதூதரை நிராகரித்த அம்மக்கள் அவர்களுக்கு அத்தாட்சியாக அல்லாஹ் அனுப்பிய ஒட்டகையையும் அறுத்துக் கொன்று விட்டனர். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து இவர்கள் மிகப்பெரும் பேரிடி முழக்கத்தால் பீடிக்கப் பட்டு தங்கள் வீடுகளில் அழிந்து கிடந்தனர் என்று குர்ஆன் கூறுகிறது.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர், (11:67)
பாறைகளைக் குடைந்து வீடுகளை நிர்மிக்கும் வலிமை மிக்க கோத்திரத்தாராக இருந்தனர் ஃதமூது கோத்திரத்தார். இன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ள இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் இவ்வீடுகளில் பலவும் இன்றளவும் காணப்படுகிறது.
பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந் (து அதில் வாழ்ந்)தவர்களான தமூ(து கூட்டத்)தையும் (89:9)
மேலும், ‘ஆது(க் கூட்டத்தாரு)க்குப் பின் உங்களை பிரதிநிதிகளாக்கி (அவர்களி ருந்த) பூமியில் உங்களை வசிக்கச் செய்ததை - நீங்கள் நினைவு கூர்ந்திடுங்கள் (கோடை காலங்களில் வசிப்பதற்காக). நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளைக் கட்டியும், (மழைக் காலத்தில் வசிப்பதற்காக) மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட் கொடைகளை நினைவு கூர்ந்திடுங்கள். மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்’ (என்று கூறினார்.) (7:74)
ஃதமூது பற்றிய இன்னும் சில வசனங்கள்
இன்னும், தமூது (கூட்டத்தினர்) அவர்களுக்கு நாம் நேர்வழியைக் காண்பித்தோம். எனினும், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத் தனத்தையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (41:17)
ஃதமூதுவி(ன் கூட்டத்தாரி)லும் (ஒரு அத்தாட்சி உண்டு) "நீங்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை இன்பம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்ட பொழுது தங்களது இறைவனின் கட்டளையை (மதிக்காது) அவர்கள் மீறி நடந்தனர். எனவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே - அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அப்போது அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை; இன்னும் உதவி (எதனையும்) பெறுபவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. (51: 43-45) எனவே, தமூது, (கூட்டத்தினர் எல்லை கடந்த) பெரும் முழக்கத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர். (69:5)
நபி (ஸல்) அவர்கள் தபூக்கை நோக்கிப் பயணித்த போது இந்த ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றார்கள். இந்தப் பகுதிக்கு வந்த போது “தங்களுக்குத் தாங்களே அநீதம் இழைத்துக் கொண்டவர்களின் இடங்களை நீங்கள் கடந்து சென்றால் அழுதவர்களாகச் செல்லுங்கள்” என்று மக்களிடம் கூறினார்கள் (புகாரீ)
கி.பி 1880 ல் அரபு நாடுகளுக்குப் பயணம் செய்த ஐரோப்பியப் பயணியாகிய டௌட்டி (C.M Doughty) என்பவர் அந்நாடுகளைப் பற்றி எழுதிய தனது நூலில் ஹிஜ்ர் பற்றிய குறிப்பில் பாறைகளைக் குடைந்து நிர்மிக்கப் பட்ட வீடுகள், ஆராதனைக் கூடங்கள், சபைகள் முதலியவற்றையும், இறை மறுப்பாளர்கள் ஒட்டகத்தைக் கொன்ற இடம் அது தண்ணீர் அருந்திய கிணறு முதலியவை இன்றும் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஃதமூது கோத்திரத்தினர் வாழந்த பகுதிகள், வசித்த வீடுகள் அவர்கள் பயன் படுத்திய பாத்திரங்கள், ஒட்டகை நீர் அருந்திய கிணறு ஆகியவற்றை மானிட வர்க்கத்திற்கு ஓர் அத்தாட்சியாக, படிப்பினையாக இன்றளவும் அல்லாஹ் விட்டு வைத்திருக்கிறான். திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் சம்பவத்துக்கு நேரடி சாட்சியாக விளங்கும் மதாயின் ஸாலிஹ் பகுதி திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் என்பதை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மேலும் பைபிளில் இடம் பெறாத இந்த மிக முக்கிய வரலாற்றுச் சம்பவம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பைபிளைப் பகர்த்தியே திருக்குர்ஆனை இயற்றினர் என்ற கிறித்தவ வாதத்தைத் தவிடுபொடியாக்குகிறது.
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (11:49)
இது குறித்த வீடியோ ஆதாரம்
அத்தாட்சிகள் இன்னும் இன்ஷா அல்லாஹ்...

0 comments:

 

Sample text

Sample Text